ரூ.206 கோடி ஊழல் : அமைச்சர் பங்கஜா முண்டேவுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஜூலை.17, 2015:- கடலைமிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் ரூ.206 கோடி ஊழல் செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக பாஜக அமைச்சர் பங்கஜா முண்டேக்கு மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சாலை விபத்தில் மறைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜா முண்டே.
பாஜகவை சேர்ந்த இவர், தேவேந்திர பட்னவீஸ் தலைமையிலான மகாராஷ்டிர அரசில் மகளிர் மேம்பாடு மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், அங்கன்வாடி குழந்தைகளுக்கான கடலைமிட்டாய் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் அமைச்சர் பங்கஜா முண்டே ரூ.206 கோடி ஊழல் புரிந்ததாக புகார் எழுந்தது.
மேலும், பழங்குடியின மாணவர்களுக்கு வினியோகிக்கப்பட்ட கடலை மிட்டாயில் களிமண் கலக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த முறைகேடு புகார் தொடர்பாக அமைச்சர் பங்கஜா முண்டே மீது நடவடிக்கை எடுக்ககோரி சந்தீப் அகிரே என்பவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வி.எம்.கன்னடே, அமைச்சர் பங்கஜா முண்டேவும், மகாராஷ்டிர அரசும் வருகிற 20 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.