தமிழ்நாடு அன்புமணிக்கு நெருக்கடி: ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

அன்புமணிக்கு நெருக்கடி: ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழ்நாடு  
படம்

அக் 09,2015:-  மருத்துவ கல்லுாரிகளுக்கு, விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், நேற்று உத்தரவிட்டது.

கடந்த, 2004 - 09ல், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், பா.ம.க.,வைச் சேர்ந்த அன்புமணி, சுகாதார அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, உ.பி., மாநிலம், பரேலியில் உள்ள, ரோஹில்காண்ட் மருத்துவ கல்லுாரி, மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில் உள்ள, இன்டெக்ஸ் மருத்துவ கல்லுாரி ஆகியவற்றுக்கு, விதிமுறைகளை மீறி அனுமதி வழங்கியதாக, அன்புமணி மற்றும் சிலருக்கு எதிராக, சி.பி.ஐ., சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ரோஹில்காண்ட் மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கையையும், இன்டெக்ஸ் மருத்துவ கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையையும் நிறுத்தி வைக்கும்படி, அகில இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., பரிந்துரைத்திருந்தது. இதை மீறி, அன்புமணியும், மற்றவர்களும், இந்த கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கியதாக, சி.பி.ஐ., தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையும், டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி அஜய் குமார் ஜெயின் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஐந்து பேரை விடுவித்து, நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் அவர் உத்தரவிட்டதாவது:அன்புமணி உள்ளிட்டோர் மீதான, குற்றச்சதி, ஏமாற்றுதல், மோசடி, ஊழல் தடுப்பு ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அன்புமணி, தன் அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்து, மற்றவர்களுடன் சேர்ந்து, சதியில் ஈடுபட்டு, விதிமுறைகளை மீறி, கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு போதிய ஆதாரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால், அன்புமணி மீதும், மற்றவர்கள் மீதும், இரண்டு ஊழல் வழக்குகளின் கீழ், குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, வழக்கின் விசாரணை, அடுத்த மாதம், 2ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், பா.ம.க.,வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

'அரசியல் காரணத்துக்காக வழக்கு':


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியதாவது: இந்துார் மருத்துவ கல்லுாரி தொடர்பான வழக்கில் இருந்து, என்னை விடுவிக்கக் கோரி, மூன்றரை ஆண்டுகளுக்கு முன், நான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சி.பி.ஐ., கோர்ட், தற்போது மனுவை நிராகரித்துள்ளது.இதை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளது. வழக்கு விசாரணை இனிமேல் தான் துவங்க உள்ளது. என் மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபித்து, வழக்கிலிருந்து வெளிவருவேன். அரசியல் காரணங்களுக்காகவே, என் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தமிழக அரசியலில், பா.ம.க., செயல்பாடுகளுக்கும், இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதனால், தமிழக அரசியலில் நாங்கள் முன்னெடுக்கும் எந்த முயற்சிகளுக்கும் பின்னடைவு ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

சிக்கியது யார் யார்?


* அன்புமணி - முன்னாள் மத்திய அமைச்சர்
* கே.வி.எஸ். ராவ் - முன்னாள் சுகாதார துறை உதவி செயலர்
* படோரியா - இந்துார் கல்லுாரி தலைவர்
* நிதின் கோத்வால் - இந்துார் கல்லுாரி ஊழியர்
* பவன் பம்பானி - இந்துார் கல்லுாரி ஊழியர்
* கே.கே. அகர்வால் - பரேலி கல்லுாரி தலைவர்

விடுவிக்கப்பட்டவர்கள்:


* ஜே.எஸ்.துாபியா - சப்தர்ஜங் மருத்துவ கல்லுாரி டாக்டர்
* தீபேந்திர குமார் - சப்தர்ஜங் மருத்துவ கல்லுாரி டாக்டர்
* சுதர்சன் குமார் - சுகாதார துறை முன்னாள் அதிகாரி
* கே.கே. சக்சேனா - இந்துார் கல்லுாரி இயக்குனர்
* டோங்கியா - இந்துார் கல்லுாரி பேராசிரியர்.

மருத்துவக் கல்லுாரிக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில் இருந்து, அன்புமணியை விடுவிக்க முடியாது என, கோர்ட் அறிவித்துள்ளது. மற்றவர்கள் செய்த ஊழல்கள் குறித்தெல்லாம் பேசும் அவர், தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், தன்னை குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்; அது அவரது கடமை.
எச்.ராஜா,
பா.ஜ., தேசிய செயலர்

அடிப்படை முகாந்திரம் இருப்பதால், ஊழல் வழக்கில் இருந்து அன்புமணியை விடுவிக்க முடியாது என, கோர்ட் அறிவித்துள்ளது. திராவிட கட்சிகளை ஊழல் கட்சிகளாக விமர்சிக்கும் அவர், இப்படிப்பட்ட ஊழல் வழக்கில் இருந்து, விடுபடாத வரையில், மற்றவர்களை ஊழல்வாதிகள் என விமர்சிப்பதுநியாயமாகாது.
ஜி.ராமகிருஷ்ணன்,
மாநில செயலர், மார்க்சிஸ்ட்

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்