அருண் ஜேட்லிக்கு இது தெரியுமா? தெரியாதா?

வருமான வரித் துறை ஆணையர் சஞ்சய் ஸ்ரீவாஸ்தவா, என்.டி.டி.வி. தொலைக்காட்சி கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர். இதன் காரணமாகவே அவர் அப்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் கோபத்துக்கு ஆளானார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் நாகபிரசாத்தை சென்னையில் அவரது அலுவலகத்தில் சந்தித்தார். ஜே.டி. குழுமம் விவகாரம் என்னவாயிற்று என்று கேட்டார். இதையடுத்து, ஜே.டி. குழுமம் தொடர்பான வழக்குகளுக்குப் பொறுப்பான இணை இயக்குநரை வரவழைத்தார்.
""ஜே.டி. குழுமத்தில் அதிரடிச் சோதனை நடத்திய நீங்கள், போதிய ஆதாரம் இருந்தும் வாசன் குழுமம் மற்றும் அதில் தொடர்புடைய டாக்டர் அருண் வீட்டில் ஏன் சோதனை நடத்தவில்லை?'' என்று கேட்டுள்ளார்.
இதற்குப் பதிலளிக்காமல் நாகபிரசாத் மௌனம் காத்திருக்கிறார். இணை இயக்குநர், ஸ்ரீவாஸ்தவாவிடம், மேலிடத்தின் அறிவுரையின் பேரில்தான் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜே.டி. குழுமம் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தபோதிலும் அதுபற்றி ரிசர்வ் வங்கி, பங்குச் சந்தை ஒழுங்காற்று ஆணையம் (செபி), மத்தியப் புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை, மாநில அரசு, காவல் துறை போன்றவற்றுக்குத் தகவல் தெரிவிக்காதது ஏன் என்று ஸ்ரீவாஸ்தவா கேள்வி எழுப்பினார். அதற்கும் பதிலளிக்காமல் நாகபிரசாத் மௌனம் சாதித்திருக்கிறார். இதற்கு, புலனாய்வுத் துறை இணை இயக்குநர் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகப் பதிலளித்திருக்கிறார். இந்த விவகாரத்தில் இடைத்தரகர் என்று சொல்லப்படும் குரு பிரசாத் என்கிற குருசாமி நாயுடு என்பவருக்குத் தொடர்பு இருக்கலாம் என்றும், அவர் நாகபிரசாத்துக்கு நெருக்கமானவர் என்பதும்கூட தெரியவந்துள்ளது.
இந்த விவகாரத்தை மூடிமறைக்க சிலர் முயற்சி செய்த போதிலும், அரசின் உயர்நிலையில் உள்ள அதிகாரிகள் சிலர் இப்போது விழித்துக் கொண்டுள்ளனர். இந்த வழக்கைத் தூசி தட்டி கையிலெடுக்க அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். பிரச்னை விஸ்வரூபம் எடுப்பது தெரிந்ததும் நிதியமைச்சகத்திலுள்ள ப.சிதம்பரம் விசுவாசிகளுக்கு வயிற்றில் புளியைக் கரைக்கத் தொடங்கி இருக்கிறது.
இந்த வழக்கை கையில் எடுக்காமல் இதுநாள் வரை கிடப்பில் போடப்படுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த நாக பிரசாத், அதிவேகத்தில் விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றிருக்கிறார். சாதாரணமாக ஆறு மாதம், ஒரு வருடம் என்று விருப்ப ஓய்வு வேண்டுகோளுக்கான அனுமதி தாமதப்படும். ஆனால், நாகபிரசாதின் விருப்ப ஓய்வு வேண்டுகோள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி விருப்ப ஓய்வு பெற்றுவிட்ட நாகபிரசாத் இப்போது வெளிநாட்டுக்குப் போய், வேறு ஏதாவது நாட்டுக் குடியுரிமை பெற முயற்சிப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அவரைத் தப்பிப் போக வைப்பதன் மூலம் விசாரணையை முடக்குவதுதான் சிதம்பரம் விசுவாசிகளின் நோக்கம்.
வாசன் நிறுவனத்துக்கும் சிதம்பரத்துக்கும் ரகசிய உறவு இருப்பதற்கு பின்வரும் சம்பவத்தை தொடர்புபடுத்திக் கொள்ளலாம். வாசன் நிறுவனம் தனது ஊழியர்களிடம் வருமான வரிப் பிடித்தம் செய்தது. ஆனால், அந்தத் தொகையை வருமான வரித் துறையிடம் செலுத்தவில்லை. டிசம்பர் 2014-ஆம் ஆண்டுடன் முடிவடைந்த அரையாண்டு காலத்துக்கு வாசன் நிறுவனம் ரூ. 19.22 கோடியைச் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செலுத்தவில்லை. இது கிரிமினல் குற்றம்.
அரசுக்குச் சேர வேண்டிய பிடித்தம் செய்யப்பட்ட வரித் தொகையைச் செலுத்தாவிட்டால் சட்டப்படி சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். பிடித்தம் செய்த வரிப் பணத்தை செலுத்துவதில் சிறிது காலதாமதம் ஆனாலே சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குத் தொடுக்கலாம் என்கிறது உச்ச நீதிமன்றம். வெறும் 1.29 லட்சம் வரிப் பணத்தை செலுத்தாத நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுக்கப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. அப்படியிருக்கையில் ரூ. 19.22 கோடி வரிப் பணத்தை செலுத்தாமல் தாமதம் செய்து வரும் வாசன் நிறுவனத்தின் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே, ஏன்?
ஹைதராபாதைச் சேர்ந்த கிட்டி ஸ்டீல்ஸ் லிமிடெட் நிறுவனம் வரிப் பிடித்தம் செய்த தொகையை அது சிறிய தொகையாக இருந்தபோதிலும் உடனடியாகச் செலுத்தத் தவறியதால் வழக்குத் தொடுக்கப்பட்டு, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு மூன்று மாதம் கடுங்காவல் தண்டனை விதித்ததுடன் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. இந்தச் செய்தி கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி "பைனான்சியல் எக்ஸ்பிரஸ்" நாளிதழில் வெளிவந்தது. அதை மத்திய நேரடி வரிகள் வாரியம் படித்ததா என்பது தெரியவில்லை.
வசூலித்த வரித் தொகையைச் செலுத்தாமல் இருந்ததற்கு சென்னையில் உள்ள தலைமை வருமான வரித் துறை ஆணையர் சட்டப்படி வாசன் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வாசன் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் மத்திய நேரடி வரிகள் வாரியத்தைத் தொடர்பு கொண்டு தவறை ஒப்புக்கொண்டு, பிடித்தம் செய்யப்பட்ட வரிப் பணத்தை தவணை முறையில் கட்ட அனுமதி கோரியுள்ளது.
அதைவிட வேடிக்கை, வாசன் நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்காததற்கு சென்னை தலைமை வருமான வரித் துறை ஆணையருக்கு பரிசு வழங்கப்பட்டிருக்கிறது. எப்படி என்கிறீர்களா? சென்னையில் உள்ள தலைமை வருமான வரித் துறை ஆணையர் பணியிட மாற்றம் கோரி வந்தார். அவரது மனைவி கொச்சியில் வருமான வரித் துறை ஆணையராக இருந்து வந்தார், வருகிறார். இப்போது அவர்கள் இருவரும் தில்லிக்கு பணியிட மாற்றத்தில் சென்றுவிட்டனர். "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்' என்கிறது குறள்.
ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட வரிப் பணம் சிறியதாக இருந்தாலும் அதைச் செலுத்தாமல் பலரும் சிறை செல்லவேண்டிய சூழ்நிலையில், சுமார் ரூ. 20 கோடி வரிப் பணத்தை செலுத்தாமல் காலம் தாழ்த்துவதுடன் அதற்கு தவணை கேட்டு வாசன் நிறுவனம் மத்திய நேரடி வரிகள் வாரியத்துக்கு கடிதம் எழுதுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம் அதை ஏற்றுக் கொள்கிறது.
என்ன வேடிக்கை இது?
வெறும் ரூ. 1.29 லட்சம் வரிப் பிடித்ததைச் சில வாரங்கள் தாமதித்ததற்காக ஒருவர் சிறைக்கு அனுப்பப்படுகிறார். இங்கே ஏறத்தாழ ரூ. 20 கோடி வரி ஏய்ப்பு செய்திருக்கிறது வாசன் நிறுவனம். அவர்கள் கடிதம் எழுதி மன்னிப்பு கோரினால் வாரியம் ஏற்றுக் கொள்கிறது.
நன்றாக இருக்கிறது நீதி!
இதிலிருந்தே இதன் பின்னணியில் இருந்து செயல்படுவது யார் என்பதும், ஆட்சி மாறியும் மத்திய நிதியமைச்சகத்தில் காட்சிகள் மாறவில்லை என்பதும் தெரிகிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அருண் ஜேட்லி நிதியமைச்சராக இருக்கின்ற போதிலும், ப. சிதம்பரத்துக்கு வருமான வரித் துறை அலுவலக அதிகாரிகளிடம் ரகசியத் தொடர்பு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. முன்னாள் அமைச்சரின் விசுவாசிகளால்தான் இப்போதும் நிதியமைச்சகம் நடத்தப்படுகிறது என்பதும், கடந்த ஆட்சியில் பலரும் நடத்திய முறைகேடுகளும், ஊழல்களும் இவர்களால் மூடி மறைக்கப்பட்டு, குற்றவாளிகளின் குட்டு வெளியாகிவிடாமல் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
வாசன் விவகாரத்தில் மட்டுமல்ல, என்.டி.டி.வி. தொலைக்காட்சி வரி ஏய்ப்பு விவகாரத்திலும் ப.சிதம்பரத்துக்குத் தொடர்பு உள்ளது. அதனால்தான், என்.டி.டி.வி. ரூ. 900 கோடி வரி ஏய்ப்பு செய்த விவகாரத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அவர்களுக்குத் துணை நிற்கிறது. இது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு தெரியாமல் நடக்கிறதா, இல்லை தெரிந்துதான் நடக்கிறதா? அவர் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறாரா, இல்லை நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறாரா?