அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

அக் 15,2015:- கூடுதல் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு செயலாளர் உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
2ஜி முறைகேடு தொடர்பாக, மத்திய தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்தத் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.846.44 கோடி இழப்பை ஏற்படுத்திவிட்டதாக சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்திருந்தது.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், இந்த குற்றச்சாட்டில் தொடர்புடைய, முன்னாள் செயலர் ஷியாமள் கோஷ் மற்றும் 3 தனியார் நிறுவனங்களையும் விடுவித்து நீதிபதி ஓ.பி.ஷைனி இன்று உத்தரவிட்டுள்ளார். மேலும், முறையான ஆதாரங்கள் ஏதும் இல்லாமல் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், வழக்கு தொடர்ந்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்துமாறும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.