இந்தியா லஞ்சம் வாங்கிய அமைச்சர்: யூடியூப் வீடியோவால் பதவியை ராஜினாமா செய்தார்

லஞ்சம் வாங்கிய அமைச்சர்: யூடியூப் வீடியோவால் பதவியை ராஜினாமா செய்தார்

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

அக் 12,2015:- பிகாரில் தான் லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகள் இணையதளத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அமைச்சர் அவதேஷ் குஷ்வாஹா தமது பதவியை ராஜிமாநா செய்தார்.

பிகாரில் முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான அரசில் நகர வளர்ச்சித்துறை அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த அவதேஷ் குஷ்வாஹா பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், அவர் சில நபர்களிடம் இருந்து லஞ்சம் வாங்குவது போன்ற காட்சிகளை "ஜெய் ஹிந்த் பிகார்' என்ற அமைப்பு ஞாயிற்றுக்கிழமை யூடியூப் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. எனினும், அந்த விடியோ பதிவில் அமைச்சரின் குரல் தெளிவாக இல்லை. "பிகார் தேர்தலில் வென்று ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் ஆட்சியமைத்தால் சில ஒப்பந்தங்களைத் தருவதாக அமைச்சர் உறுதியளிக்கிறார்' என்ற வாக்கியம் பின்னணியில் ஒலிக்கிறது.

இதையடுத்து, அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யுமாறு குஷ்வாஹாவுக்கு முதல்வர் உத்தரவிட்டதாகவும் அதை ஏற்று அவர் ராஜிநாமா செய்ததாகவும் ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவித்தன. ராஜிநாமா செய்வதற்கு முன் குஷ்வாஹா, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ""இந்த விடியோ பதிவு எங்கிருந்து வந்தது என்று எனக்குத் தெரியாது. என்னை பாஜக குறிவைத்துள்ளது. நான் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்குவதாக சித்திரிக்கும் விடியோ காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து முதல்வரிடம் பேசினேன். அதைத் தொடர்ந்து பதவியை ராஜிநாமா செய்து விட்டேன்'' என்றார்.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் சரத் யாதவ் கூறுகையில், ""குஷ்வாஹாவிடம் இருந்து பதவி விலகல் கடிதம் பெறப்பட்டுள்ளது. அது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது' என்றார்.

முன்னதாக, கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் உள்ள பிப்ரா தொகுதியின் வேட்பாளராக குஷ்வாஹாவை ஐக்கிய ஜனதா தளம் அறிவித்திருந்தது. தற்போது எழுந்துள்ள லஞ்சப்புகாரை அடுத்து அவருக்குப் பதிலாக மற்றொரு வேட்பாளரை நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்