மக்களின் ஆலோசனை பெற்றே பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) உருவாகும்

அக் 01,2015:- சென்னை மாநகர மக்களின் ஆலோசனை பெற்றே பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) உருவாகும் என, மாநகர மேயர் சைதை துரைசாமி தெரிவித்தார்.
சென்னையை பொலிவுறு நகரமாக மாற்றுவது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தை சென்னை மேயர் தொடக்கிவைத்தார். இதில், கைத்தறி துணிநூல் அமைச்சர் கோகுல இந்திரா, துணை மேயர் பெஞ்சமின், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், குடியிருப்பு நலச் சங்கத்தினர், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, பொலிவுறு நகரம் திட்டம் குறித்து ஜெஎல்எல் நிறுவன அதிகாரிகள் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். இதேபோல, பொதுமக்கள் பலரும் நகரமைப்பு வல்லுநர்கள் ஆலோசனைப் பெற்று பொலிவுறு நகரம் உருவாக வேண்டும் என பல்வேறு யோசனைகளைத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மேயர் சைதை துரைசாமி பேசியதாவது: சென்னையை பொலிவுறு நகரமாக உருவாக்குவதற்கு மத்திய, மாநில அரசு ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. இந்தத் திட்டத்தை முதல் கட்டமாகச் செயல்படுத்த அரசு, 20 நகரங்களைத் தேர்வு செய்ய உள்ளது. இந்தத் திட்டம், நகர சீரமைப்பு, நகர புனரமைப்பு, புதிய நகர வளர்ச்சி ஆகியவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இதன்படி, மின்னணு சேவை, கழிவு மேலாண்மை, நீர் மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை, நகர்ப்புற இயக்கம் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. இதற்கான திட்டம் தயாரிப்பதற்கு பொதுமக்களின் கருத்துகள், பரிந்துரைகள் அவசியமானவை.
இதன்படி, பொதுமக்கள் வருகிற 15-ஆம் தேதிக்குள் குடிநீர் வழங்கல், சுகாதார வசதிகள், தகவல் தொழில்நுட்பத் தீர்வு, கட்டமைப்பு, பாதுகாப்பு உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவிக்கலாம். பொலிவுறு நகரம் திட்டம் தயாரிக்க www.chennaicorporation.gov.in, wwww.facebook.com, www.linkedin.com என்ற இணையதள, சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். இதேபோல, மண்டல அலுவலகங்களில் உள்ள கருத்து கேட்புப் பெட்டிகளிலும் கருத்துகளைப் பதிவு செய்யலாம். ஆகவே, இந்தத் திட்டம் பொதுமக்களின் ஆலோசனை பெற்றே செயல்படுத்தப்படும் என்றார்.