கோதாவரியும் கிருஷ்ணாவும் இணையும்போது காவிரியும் வைகையும் இணையாதா?

செப் 22,2015:- ஆந்திராவில் பாயும் கோதாவரியையும் கிருஷ்ணாவையும் குறுகிய காலத்தில் இணைத்து, ''முடியவே முடியாது'' என்று கருதப்பட்ட நதிநீர் இணைப்பை சாத்தியமாக்கி உள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. இதைப் பார்த்தாவது, தமிழகத்திலும் அதுபோன்ற திட்டத்தை நமது ஆட்சியாளர்கள் செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
படுவேக திட்டம்: ஆந்திராவில் வறட்சியில் வாடும் ராயலசீமா பகுதியை வளமாக்கும் நோக்கத்தில், தென்னிந்தியாவில் பெரிய நதியான கோதாவரியையும் கிருஷ்ணாவையும் இணைக்க சந்திரபாபு திட்டமிட்டார். ஆண்டுதோறும் கோதாவரியில் இருந்து கடலில் கலந்து வீணாகும் 3000 டிஎம்சி தண்ணீரை பயன்படுத்த நினைத்தார்.
1950ம் ஆண்டே இது திட்டமிடப்பட்டிருந்தாலும் இடையில் யாரும் இத்திட்டத்தை செயல்படுத்தவில்லை.
ஆனால் இதை செயல்படுத்த நினைத்தார் சந்திரபாபு. இத்தனைக்கும் சென்ற ஆண்டு மார்ச் மாதத்தில் தான் இதற்கான அடிக்கல்லை நாட்டினார். இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை 1300 கோடி ரூபாய் மட்டுமே.
உண்மையான அர்ப்பணிப்புடன் பணி நடந்ததால், 174 கி.மீ., நீளத்திற்கு தோண்டப்பட்ட கால்வாய் மூலம் ஆறுகள் இணைக்கப்பட்டு, சென்ற 1ம் தேதி முதல் கால்வாயில் தண்ணீர் பாய்கிறது. இதன்மூலம் புதிதாக 17 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறப்போகிறது.
தமிழகம் போன்ற தண்ணீருக்காக ஏங்கும் மாநில மக்களுக்கு நினைத்தாலே மெய்சிலிர்க்க வைக்கும் திட்டம் இது.
தமிழகத்தில் எப்போது?: தமிழகத்தில் காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோதாவரி - கிருஷ்ணா போல அதிக செலவு பிடிக்கும் திட்டமும் இது இல்லை. ஆனால் இதைக் கூட நமது அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் நிறைவேற்றாமல் ஏமாற்றுவது வேதனை அளிக்கிறது.
இதற்கு காரணம், எந்த அரசியல்வாதிக்கும் உண்மையான அர்ப்பணிப்பு உணர்வு கிடையாது. மக்கள் முன்னேற்றத்தில் அக்கறை கிடையாது என்பது தான். என்று தான், இதுபோன்ற திட்டங்கள் இங்கு நிறைவேற்றப்படுமோ என்ற ஏக்கத்தைத் தான் இது ஏற்படுத்துகிறது.