கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் பரபரப்பு

ஆக.12, 2015:- கேட்வே ஆப் இந்தியா கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கேட்வே ஆப் இந்தியா கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கடலை ரசித்து கொண்டிருந்தனர்.
அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்து வந்தன. இதை பார்த்ததும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியமும் ஆனந்தமும் அடைந்தனர். அந்த ரூபாய் நோட்டுகளை எடுப்பதற்காக மீனவர்கள் சிலர் கடலுக்குள் இறங்கினார்கள்.
இந்த நிலையில், தகவல் அறிந்து கொலபா போலீசார் அங்கு வந்தனர். மீனவர்கள் கடலில் இருந்து எடுத்த ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவர்கள் கைப்பற்றினார்கள். கடலில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்ததால் கேட்வே ஆப் இந்தியா பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பணத்தை கடலில் வீசியது யார்? என்பதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.