பெயருக்கு பின்னால் பி.ஏ, எம்.ஏ ஏன்? : பெண் மேயரின் வினோத விளக்கம்

ஆக.11, 2015:- பெயருக்கு பின்னால் பி.ஏ, எம்.ஏ என்று போட்டுள்ளது பற்றி செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு திருப்பூர் மேயர் கொடுக்கும் வினோத விளக்கம் நகைச்சுவையை கிளப்பி உள்ளது. மேயரின் உரையாடல் வாட்ஸ் அப்பில் பரபரப்பாக உலா வருகிறது. திருப்பூர் மேயராக இருப்பவர் விசாலாட்சி. இவரது பெயருக்கு பின்னால் பி.ஏ என்றும் பின்னர் எம்.ஏ என்றும் பேனர்களில் போடப்படுகிறது. ஆனால் உண்மையில் அவர் பட்டதாரி அல்ல. இது பற்றி செய்தியாளர் ஒருவர் மேயர் விசாலாட்சியுடன் உரையாடும் சுவாரஸ்யமான உரையாடல் தற்போது வாட்ஸ் அப்பில் உலாவருகிறது.
செய்தியாளர் தன்னை சென்னையில் இருந்து பேசுவதாக கூறி தகவல் பெறும் சட்டத்தின் கீழ் தனது அலுவலகத்துக்கு ஒருவர் கடிதம் எழுதி உள்ளதாகவும் அது பற்றி சில விளக்கம் வேண்டும் எனவும் கேட்கிறார். முதலில் மேயரின் சில சொத்து விபரங்களை கேட்கிறார். பின்னர் அவரது பினாமி என ஒரு நபரை குறிப்பிட்டு கேட்கிறார். அதற்கு மேயர் விளக்கம் கொடுத்தவுடன் தாங்கள் ஏழாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தியதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் சமீப காலமாக தங்களுடைய பெயருக்கு பின்னால் பிஏ என்று போட்டுள்ளீர்களே நீங்கள் பி.ஏ பட்டதாரியா என கேட்கிறார்.
அதற்கு மேயர், அதை பட்டம்னு நினைச்சுட்டீங்களா... அய்யோ அய்யோ.. என வடிவேலு பாணியில் சிரித்துவிட்டு அது என் அப்பா பெயர் பினாங்கு அண்ணாமலை என்பதை பி.ஏ ன்னு போட்டிருக்கேன் என்கிறார். அப்படியானால் சமீப காலமாக எம்.ஏ என்றும் பிளக்ஸ் பேனர்களில் தங்கள் பெயருக்கு பின்னால் போடுகிறீர்களே அது நீங்கள் வாங்கிய பட்டமா என அவர் கேட்கிறார். அதற்கும் அவர் சிரித்து கொண்டே முதலில் எங்கப்பா பினாங்கில் இருந்ததால் பினாங்கு அண்ணாமலை என்பதற்கு பி.ஏன்னு போட்டேன் அல்லவா, அப்புறம் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு கூட இருப்பவர்கள் எல்லாம் மலேசியான்னு போட்டால் நன்றாக இருக்கும் என்று சொன்னதால் மலேசிய அண்ணாமலை என்பதற்காக எம்.ஏ என்று போட்டுள்ளேன் என்று கூறுகிறார். அப்படியானால் உங்கள் இனிஷியலைத்தான் உங்கள் பெயருக்கு பின்னால் போட்டிருக்கிறீர்கள் அப்படித்தானே மேடம் என்று செய்தியாளர் கேட்க ஆமாம்பா என்று சொல்கிறார் அந்த பெண் மேயர்.