ஏழை மாணவர்களை சேர்க்காத 30 தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

ஜூலை.10, 2015:- தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார், சுயநிதி பள்ளிகள் இயங்கி வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விச் செலவை சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினருக்கு, அரசே நேரடியாக வழங்கிவிடும்.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் ஒரு லட்சத்து 17 ஆயிரம் இடங்கள் உள்ளன. இதில் நடப்பாண்டில் 61 ஆயிரம் இடங்கள் நிரம்பி உள்ளன என்று பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இத்திட்டம் சரிவர அமல்படுத்தவில்லை என்று புகார்கள் உள்ளன.
இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களை சேர்த்து உள்ளார்களா? என்று கண்டறிய, ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் மெட்ரிக் இயக்குனரகம் மூலம் ஆய்வு குழுக்கள் அமைக்கப்பட்டது. அந்த குழுக்கள் மூலம் கடந்த மாதம் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.
அதில் வேலூர் மாவட்டத்தில் 20 தனியார் பள்ளிகளிலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 தனியார் பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ஏழை மாணவர்களை சேர்க்கவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒதுக்கீட்டின்படி ‘ஏன் ஏழை மாணவர்களை சேர்க்கவில்லை’ என்று விளக்கம் கேட்டு, 30 தனியார் பள்ளிகளுக்கும் மெட்ரிக் இயக்குனரகம் நோட்டீஸ் விடுத்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.