மின்சாரம் சேமிக்கும் கண்ணாடி இழை விசிறி : திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு

ஜூன்.28, 2015:- மின்சாரம் தயாரிப்பு செலவை குறைக்கும் கண்ணாடி இழை மின்விசிறியை திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லுாரி வடிவமைத்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கம் மின்சாதன பொருட்களின் பயன்பாடு போன்றவற்றால் மின்தேவை
அதிகரித்துள்ளது. இதனால் சி.எப்.எல்.- எல்.இ.டி., போன்ற மின்சேமிப்பு பல்புகளை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் தொழிற்சாலைகள் வணிக நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் குடியிருப்புகளில் 20 கோடி மின்விசிறிகள் உள்ளன.
தற்போது மின்விசிறிகளில் அலுமினிய இறக்கைகள் பயன்படுகிறது. இந்த இறக்கைகளின் எடை அதிகமாக உள்ளதால்தயாரிப்பு செலவும் மின்தேவையும் அதிகரிக்கிறது. இதை தடுக்க கண்ணாடி இழை இறக்கைகள் உள்ள மின்விசிறியை திண்டுக்கல் ஆர்.வி.எஸ். பொறியியல் கல்லுாரி மெக்கானிக்கல் துறைத்தலைவர் எம்.ராஜ்குமார் மாணவர் கே.சரவண பெருமாள் வடிவமைத்துள்ளனர்.
ராஜ்குமார் கூறியதாவது:மின்சாரத்தை சேமிக்க பிளாஸ்டிக் இறக்கைகள் உள்ள மேஜை மின்விசிறியை அரசு வழங்குகிறது. பிளாஸ்டிக் இறக்கைகளை மேற்கூரை மின்விசிறியில் பயன்படுத்தினால் விரைவில் உடைந்துவிடும். கண்ணாடி இழையில் தயாரிக்கப்பட்ட இறக்கைகள் உடையாது.
அலுமினியத்தை விட 28 சதவீதம் எடை குறையும். ஒரு மின்விசிறி மூலம் ஒரு மாதத்திற்கு 4 யூனிட் மின்சாரம் சேமிக்கலாம். தயாரிப்பு செலவும் ரூ.150 வரை குறையும். கண்ணாடி இழை மின்விசிறி தயாரிப்பு உரிமை கேட்டு விண்ணப்பிக்க உள்ளோம் என்றார்.