வெளிச்சத்துக்கு ஏங்கும் தமிழ்வழிக் கல்வி

இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில்தான் உள்ளது என்றனர் முன்னோர்கள். ஆனால் இன்று மெட்ரிக் பள்ளி வகுப்பறைகளில் மட்டுமே இந்தியாவின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் மட்டும் இன்னும் இருளிலேயே உள்ளது.
தமிழகத்தில் இன்று இரண்டு வழிகளில் கல்வி வழங்கப்படுகிறது. ஒன்று தமிழ்வழி. மற்றொன்று தமிழ் மக்கள் பெரிதும் விரும்பும் ஆங்கிலவழிக் கல்வி. இதில் தமிழ்வழிக் கல்வியை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் வழங்குகின்றன. ஆங்கிலவழிக் கல்வியை தனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
ஆங்கிலவழிக் கல்வியின் தரம் ஆண்டுதோறும் மெருகேற, இன்றுவரை தமிழ்வழிக் கல்வியின் தரத்தைப்பற்றி, ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாததால், அது சீர்கெட்டுப் போய் உள்ளது.
ஒவ்வோராண்டும் பள்ளிக்கல்விக்கென தமிழக அரசு பல கோடி ரூபாய் செலவு செய்கிறது. இது போதாதென்று மத்திய அரசும் "அனைவருக்கும் கல்வித் திட்டம்' என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய்களை அள்ளிக் கொடுக்கிறது.
இவ்வளவு இருந்தும், தமிழ்வழிக் கல்வியைப் பெற்றோர்கள் விரும்பாதது ஏன் என்ற கேள்வி இதுவரை எந்த ஆட்சியாளருக்கும் வரவில்லை. தமிழ்வழி பயின்றாலும் ஆங்கிலமும் அங்கு கற்பிக்கப்படுகிறது. ஆனால் ஆங்கிலம் கற்பிப்பதற்குத் திறமையான ஆசிரியர்களும், உரிய கட்டமைப்புகளும் பெரும்பாலான பள்ளிகளில் இருப்பது இல்லை. இதனால் தமிழ்வழிப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமைபெற முடிவதில்லை.
ஆங்கிலத்தில் புலமைபெறுவது மட்டுமே,கல்வியின் நோக்கம் என இன்றைய பெற்றோர்கள் நினைக்கின்றனர். தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்பட்டால் ஆங்கிலத்தில் புலமை பெறுவார்கள். ஆனால் அரசும், கல்வியாளர்களும் இது பற்றி இதுவரை சிந்தித்ததாகவே தெரியவில்லை.
காரணம், தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். ஆனால் முறையான கல்வியும், பயிற்சியும் அளிக்கப்பட்டால், மெட்ரிக் பள்ளி மாணவர்களை இவர்கள் முந்தி விடுவார்கள். அரசு ஒருபக்கம் தமிழ்வழிக் கல்வியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறதென்றால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஒரு சில ஆசிரியர்களும், அனைத்துத் துறை அரசு ஊழியர்களும் அலட்சியமாகச் செயல்படுவதுதான் வேதனை அளிக்கிறது.
தமிழ்வழிப் பள்ளிகளில் பணிபுரியும் எந்தவொரு ஆசிரியரின் குழந்தைகளும் அந்தப் பள்ளியில் படிப்பதில்லை. காரணம், அந்தப் பள்ளிகளின் தரம்பற்றி அந்த ஆசிரியர்களுக்கே தெரியும்.
தமிழ்வழிப் பள்ளிகளின் கல்வித்தரம் பற்றி அவர்கள் நன்கு அறிவர். தனது குழந்தைகள் ஆங்கிலவழியில் தரமான கல்வி பெறும் அதே வேளையில், தம்மிடம் படிக்கும் மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற சிந்தனை பல ஆசிரியர்களுக்கு இல்லாமல் போய்விட்டது. ஒரு சிலர் அதிசயிக்கத்தக்கவகையில் இருப்பதுண்டு. இதனால் தான், ஒரு சில அரசு உதவிபெறும் தனியார் பள்ளி நிர்வாகங்கள், தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் பிள்ளைகள்,அந்தப் பள்ளியிலேயே படிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றன.
ஆசிரியர்கள் மட்டுமல்லாது, எந்தவொரு அரசு ஊழியரும் தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பது இல்லை. அந்த அளவுக்கு அரசுப் பள்ளிகளின் தரம் தாழ்ந்து கிடக்கிறது.
இந்நிலை மாற விரைவில் பொறுப்பேற்க உள்ள அரசு, ஏதாவது செய்யுமா என்ற ஏக்கம் தமிழ்வழிக் கல்வியில் நிலவுகிறது.
பிறமொழிகளைப் புறந்தள்ளாமல், அரசுப் பள்ளிகளில், ஆங்கிலம், இந்தி மொழிகளைக் கற்பிக்கக் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் உள்ளது போல, கராத்தே, சிலம்பம், பரதம் உள்ளிட்ட பிற திறமைகளை தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் வளர்க்கவும் அரசு சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கிறோம் என்ற பெயரில், பல கோடி ரூபாயை, அனைவருக்கும் கல்வி இயக்கம் வீணடித்து வருகிறது. இதற்குப் பதிலாக மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளை அந்தந்தப் பள்ளிகளிலேயே அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வாறு செய்தால் ஆங்கிலவழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இணையாக தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களும் உயர்வார்கள். அரசு வழங்கும் அனைத்துச் சலுகைகளையும் அனுபவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், அவர்களின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க நிர்பந்திக்கலாம்.
அரசு ஊழியர் பிள்ளைகளே அரசுப் பள்ளிகளில் படிப்பதன் மூலம்,நடுத்தர மக்களும் பெரும்பாலானோர் தமிழ்வழிப் பள்ளியில் சேர்க்க விரும்புவர். இதன் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளி மீதான மோகம் குறையும்.
மொத்தத்தில் இருளில் சிக்கித் தவிக்கும் தமிழ்வழிக் கல்வியை வெளிச்சத்துக்குக் கொண்டு வர சிறந்த கல்வியாளர்களைக் கொண்டு ஒரு குழு அமைத்து ஆய்வுசெய்ய வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வியைக் கொண்டுவந்துள்ள அரசுக்குத் தரமான கல்வியையும் அளிக்க வேண்டும் என்ற கடமையும் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.