பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் நரம்பியல் பாதிப்பு ஏற்படுத்தலாம் : மருத்துவர்கள் எச்சரிக்கை

ஜூன்.23, 2015:- ஆஸ்திரேலியாவில் உடலையொட்டிய ஜீன்ஸை அணிந்திருந்த ஒரு பெண்ணுக்கு திடீரென ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அவர் முற்றிலும் முடங்கிய நிலையில் இருந்தார், அவருக்கு பலதரப்பட்ட சிகிச்சை அளித்த பின்னரே இயல்பு நிலைக்கு திரும்பினார். பாதிக்கப்பட்ட அந்த பெண் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அவரால் தனது கால்களை தூக்கவே முடியவில்லை. சிறிது நேரத்தில் உணர்ச்சியை இழந்து கீழே விழுந்த அவர் மீண்டும் எழ முடியவில்லை. இரவு நேரம் என்பதால் சாலையில் யாரிடமும் உதவியும் கோர முடியவில்லை.
பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்த டாக்ஸியை தவழ்ந்த நிலையிலேயே நிறுத்தி பின்னர் அருகே இருந்த மருத்துவமனையை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவைச் சேர்ந்த நரம்பியல் வல்லுநர் தாமஸ் டிம்பர் கூறியது'அந்தப் பெண் மருத்துவமனைக்கு வரும்போது மிகவும் மோசமான நிலையில் இருந்தார். அவரது இரண்டு கால்களின் கெண்டைத் தசைகள் கடுமையான வீக்கத்துடன் இருந்தது.
ரத்தஓட்டத்தை சீரமைக்க தொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னரே அவரது நரம்புகள் இயல்பு நிலைக்கு திரும்பியது. உடலையொட்டிய ஜீன்ஸே இதற்கு காரணம். கால்களில் ரத்தஓட்டம் தடைப்பட்டதால் தசைகள் இறுகி, கால்களின் நரம்புகளில் ஏற்பட்ட அழுத்தம் தான் இதற்கு காரணம். ஸ்கின்னி ஜீன்ஸை அணியும் பெண்கள் நீண்ட நேரம் உட்காரக் கூடாது. நாள்பட்ட நிலையில் இவ்வாறான பாதிப்பு ஏற்படலாம்' என்று தெரிவித்துள்ளார்.
‘ஜர்னல் ஆப் நியூராலஜி, நியூரோசர்ஜரி மற்றும் சைக்கியாட்ரி’ என்ற மருத்துவ சஞ்சிகையில் இது குறித்த மருத்துவர்களின் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.