பா.ஜ.க.வின் தோல்வி பீகாரில் இருந்து தொடங்கட்டும்: ஆவேசப்படும் ராம்ஜெத்மலானி!

அக் 16,2015:- கருப்பு பணத்தை மீட்டு வருவேன் என்று சொல்லி, மக்களை நம்பிக்கை மோசடி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தண்டனையாக, பா.ஜ.க.வின் தோல்வி பீகாரில் இருந்து தொடங்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ராம்ஜெத்மலானி பேசும்போது, ''கருப்பு பணத்தை மீட்டு வருவேன் என்று சொல்லி மக்களின் நம்பிக்கையை மோசடி செய்த மோடி தலைமையிலான பா.ஜ.க.வை பீகார் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். பா.ஜ.க.வின் தோல்வி என்பது பீகாரில் இருந்து தொடங்க வேண்டும்.
வெளிநாட்டில் உள்ள கருப்பு பணத்தை மீட்க பா.ஜ.க. அரசு உருப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஜெர்மனியில் கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள 1,400 நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு எழுத்துபூர்வமாகக் கோரிக்கை விடுத்திருக்க வேண்டும். அப்படி கோரிக்கை விடுக்கப்பட்டால் ஜெர்மனி அரசு அந்தப் பெயர்களை வெளியிடவும் தயாராக இருந்தது.
இதுதொடர்பாக பா.ஜ.க.வின் பல தலைவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் ஒருவர்கூட பதிலளிக்கவில்லை. கருப்பு பணத்தை மீட்போம் என்று சொன்னதை ஒரு பேட்டியில் கிண்டல் செய்யும் அமித்ஷா, அந்த வாக்குறுதியை முழுமையான நகைச்சுவையாக மாற்றிவிட்டார். என்னை முட்டாளாக்கியது போல், பீகார் மக்களையும் பா.ஜ.க. முட்டாளாக்க முடியாது" என்றார்.