மோடியை கிண்டலடித்த பா.ஜ., அமைச்சர்

அக் 13,2015:- பா.ஜ., ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர், பிரதமர் மோடியையும், 'துாய்மை இந்தியா' திட்டத்தையும் கிண்டலடித்து பேசியது, சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழிப்புணர்வு :
ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சமூகநீதித் துறை அமைச்சராக இருப்பவர், கிருஷ்ணகுமார் பேடி. இவர், துாய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, சமீபத்தில், சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவர், அருகில் நின்றவர்களிடம், 'பிரதமர் மோடி, இன்னும் எங்களை என்னவெல்லாம் செய்ய சொல்லப் போகிறாரோ தெரியவில்லை' என, கையில் வைத்திருந்த துடைப்பத்தை துாக்கியபடி, கிண்டலாக பேசினார். பின், அங்கு செய்தியாளர்கள் இருப்பதை பார்த்து, சுதாரித்த அவர், 'தயவு செய்து, இதை செய்தியாக போட்டு விடாதீர்கள்' என்றார். ஆனால், இந்த தகவல், 'பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, ஹரியானா காங்., மூத்த தலைவர் அசோக் தன்வார் கூறுகையில், ''அமைச்சரின் இந்த கருத்து மூலம் துாய்மை இந்தியா திட்டத்தை, வெறும் விளம்பரத்துக்காக மட்டுமே, பா.ஜ., தலைவர்கள் செய்கின்றனர் என, தெளிவாக தெரிகிறது,'' என்றார்.
அலட்சியம்:
கிருஷ்ணகுமார் பேடி கூறுகையில், ''அதிகாரிகள் சிலர், துாய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் அலட்சியமாக உள்ளனர். இதை குறிப்பிடும் வகையில், நான் பேசியதை, வேறு மாதிரியாக திரித்து வெளியிட்டு உள்ளனர்,'' என்றார். ஆனால், அவர் இதற்கு முன்பும், இதேபோல் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.