மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: முழுக்க உள்நாட்டு விசாரணை; சிறிசேனா

அக் 04,2015:- இலங்கை உள்நாட்டுப் போரின்போது மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக முழுக்க முழுக்க உள்நாட்டு விசாரணை நடைபெறும் எனவும், அயல்நாட்டு நீதிபதிகள் நிச்சயம் இடம்பெற மாட்டார்கள் எனவும் அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெர்ற ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றபின் நாடு திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
உள்நாட்டுப்போர் என்ற இந்த சூழல் மீண்டும் உருவெடுத்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு தேசமாக நாம் முன்னேறிச் செல்ல வேண்டிய தேவை உள்ளது. ஐ.நா. தீர்மானம் தொடர்பான விவாதத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், சமயக் குழுவினர் பங்கேற்பர்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அரசியலமைப்புக்கு உட்பட்ட முழுக்க முழுக்க உள்நாடு சார்ந்ததாக இருக்கும். அமெரிக்க உதவியுடன், 38 நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது எனது அரசுக்கு கிடைத்திருக்கும் உத்வேகம் ஆகும்.
சர்வதேச விசாரணை என்ற மிரட்டல் இனி இல்லை. எனது அரசு அயலுறவை மேம்படுத்தியுள்ளது. அதிபராக எனது முதல் பணி, சர்வதேச சமூகத்தின் நல்லெண்ணத்தைச் சம்பாதிப்பதாகும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.