தமிழின் சிறப்புகள் இலங்கையின் தென்பகுதி ஊரில் 2200 ஆண்டுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள்

இலங்கையின் தென்பகுதி ஊரில் 2200 ஆண்டுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள்

பதிவர்: நிர்வாகி, வகை: தமிழின் சிறப்புகள்  
படம்

பிராமி எழுத்துகள் தமிழ் பிராமி, அசோக பிராமி என வகைப்படுத்தலாம். தமிழ் பிராமியில் இருந்தே அசோக மன்னன் கையாண்ட பிராமி எழுத்துக்கள் தழுவப்பட்டன என்று கருதப்படுகிறது, எனினும் இதற்கான ஆதாரங்கள் அறியப்படவில்லை. இன்றைய தமிழ்

எழுத்துகளின் தோற்ற எழுத்து என அறியப்பட்ட தமிழ் பிராமி எழுத்துகள் உலகின் பல பாகங்களில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கல்வெட்டுகளில், நாணயங்களில், மோதிரங்களில், எளிமையான மக்கள் உபயோகித்த மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டது வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.


சில முக்கிய ஆய்வுகள்

கல்வெட்டுக்கள்:

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள்
காலம்: கி.மு 2 - கி.பி 3ம் நூற்றாண்டு (சங்க காலம்)
மாங்குளம், மதுரை : நெடுஞ்செழியன்
புகலூர், கரூர் : சேரல் இரும்பொறை
ஜம்பை, திருக்கோவிலூர் : அதியன் நெடுமான்

சமீப காலத்தைய கண்டுபிடிப்புகளில் (2006) வைகை ஆற்றின் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நினைவுச்சின்னக் கற்களில் தமிழ் பிராமி எழுத்துகளில் தமிழ் எழுதப்பட்டுள்ளது. இதன் காலம் கி.மு 2 - 1ம் நூற்றாண்டாகும்.


நாணயங்கள்:

செப்பு நாணயங்கள்
பெருவழுதி (பாண்டிய மன்னன், சங்க காலம் - கி.மு 2ம் நூற்றாண்டு)
கரூர் - சேரல் இரும்பொறை (கி.பி முதலாம் நூற்றாண்டு)

வெள்ளி நாணயங்கள்
சேரர் (கி.பி 3ம் நூற்றாண்டு)
குறிப்பிடத்தக்க வியக்கும் வகையில்,
ஆந்திராவின் சடவாகனரின் (கி.பி 1ம் - 3ம் நூற்றாண்டு ) வெள்ளி நாணயங்களில் ஒரு புறத்தில் பிராகிருதத்தில் வட பிராமி எழுத்துகளாலும், மறு புறத்தில் தமிழில் தமிழ் பிராமி எழுத்துக்களாலும் இரு மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இது பிராகிருதமும் தமிழுமே உத்தியோகபூர்வ மொழிகளாக அப்பகுதியில் இருந்ததற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

மட்பாண்டங்கள்:

உறையூர், அழகன்குளம், கொடுமணல் போன்ற பகுதிகளில் மேற்கொண்ட அகழ்வாராய்வுகளில் இருந்தும் பல்வேறு இடங்களில் நடாத்தப்பட்ட மேற்புற ஆய்வுகளில் இருந்தும் தமிழில் தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட (காலம்: கி.மு 2ம் - கி.பி 3ம் நூற்றாண்டு) எண்ணிக்கையில் பெருகிக்கொண்டு இருக்கும் மட்பாண்ட சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை மேலும் தமிழ் நாடைத்தவிர இந்தியாவின் ஏனைய பகுதிகளிலும் காணப்படுகிறது. அன்றைய காலத்தில் தமிழின் நிர்வாக செயற்பாடுகள் இதன் மூலம் தெளிவாகிறது. மட்பாண்டம் சிதைந்து இருந்தாலும் ஆதாரங்கள் உறுதியானவை!

இதுவரைக்கும் தொல்பொருட்களில் பிராமி எழுத்துக்கள் உள்ள அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட இடங்களாவன :

தமிழ் நாடு

தமிழ் பிராமி எழுத்து மட்பாண்டம்
காலம்: கி.பி 3ம் நூற்றாண்டு
எடுக்கப்பட்ட இடம்: ஆண்டிப்பட்டி
வாசகம்: "நாகன் ஊறல்" (நாகனின் புதிதாக வெட்டப்பட்ட கள்ளு என்று பொருள் படும் இந்த வாசகம் நாகன் என்பவரால் மற்ற எந்தவொருவரும் அதனை எடுக்கக் கூடாது என்ற நோக்கம் கொண்டு எழுதப்பட்டதாக இருக்கலாம்.)

இலங்கை

யாழ்ப்பாணப் பகுதிகளில் இருந்து பல மட்பாண்டங்கள் தமிழ் பிராமி எழுத்துகளுடன் அடையாளம் காணப்பட்டுள்ளது, எனினும்
கி.மு 200க்கு முற்பட்டதாகக் கருதப்படும் தமிழ் பிராமி எழுத்துகள் கொண்ட மட்பாண்ட மிகுதிகள் ஜெர்மனியைச் சார்ந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களால் திசமகராகம என்னும் இலங்கையின் தென்பகுதி ஊரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புராதன சிவப்பு கருப்பு நிறத்தினாலான மட்பாண்டத்தில் பொறிக்கப்பட்ட இந்த எழுத்துகள் ஐராவதம் மகாதேவன் அவர்களால் “திரளி முறி” என்று அறியப்பட்டது, இதன் பொருள் “சபையின் எழுதப்பட்ட உடன்பாடு” என்பதாகும்.


இது இலங்கையின் தென் பகுதியில் ஒரு தமிழ் வியாபாரக் குழு கி.மு மூன்றாம் நூற்றாண்டில் திரைகடல் வாணிகம் செய்தனர் என்பதற்குரிய அத்தாட்சியாக இருக்கிறது. இதன் கடைசி எழுத்து “றி” என்பது தமிழ் பிராமி எழுத்திற்கே உரிய வடிவம் கொண்டது என கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் பிராமி எழுத்துக்கள் மேலும் பெருங்கற்கால அல்லது ஆரம்ப மனித சரித்திர காலக் குறியீடுகளுடன் சேர்ந்து காணப்பட்டுள்ளது. திசமகாரகம அல்லது புராதன மகாகமவானது கதிர்காமத்தின் அருகே அமைந்துள்ளது.

பெரேணிக், எகிப்து :
காலம்: கி.பி 60 - 70
வாசகம்: தமிழில் தமிழ் பிராமி எழுத்துகளால் "கொற்றபூமான்" என்பது குழுத்தலைவர் என்பதனைக் குறிக்கிறது. சங்ககாலத்தில் தமிழர்களின் உலகளாவிய வணிகத்தை இது காட்டுகிறது.

தாய்லாந்து:
காலம்: கி.பி 2ம் நூற்றாண்டு
வாசகம்: பூர்த்தியடையாத ஆனால் "முனிவர்" என்னும் கருத்து தரக்கூடிய தமிழில் தமிழ் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது.

ஆதாரம்: இந்து பத்திரிகையில் வெளியான ஐராவதம் மகாதேவன் அவர்களின் கட்டுரை

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்