கிரானைட் கொள்ளை : தோண்ட, தோண்ட எலும்புக்கூடுகள், குவாரி கொள்ளையில் கொலை ?

செப் 13,2015:- தமிழகத்தை உலுக்கிய கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் தற்போது கொலை புகார் எழுந்துள்ளது. இந்த குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக அங்கு பணியாற்றிய ஒருவர் அளித்த தகவலின்படி மயானத்தில் தோண்டும் பணி துவங்கியது. இதில் எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளது .
மதுரை மாவட்டம் மேலூரில் பி.ஆர்.பி., நிறுவனத்தினர், அனுமதியின்றி கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததன் மூலம் பல கோடி முறைகேடு செய்தது . இது கடந்த 1999 முதல் வெளி வரத் துவங்கியது. மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் இந்த கொள்ளையை கண்டுபிடித்தார் .
இது குறித்து கோர்ட் உத்தரவுப்படி 2012 முதல் வழக்கு பதிவு செய்து விசாரிக்கப்பட்டது . பல நூறு கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது பி.ஆர்.பி., நிறுவனத்தில் 1999 முதல் 2003 வரை டிரைவராக இருந்த சேவற்கொடியான் இங்கு 12 பேர் நரபலி கொடுக்கப்பட்டதாகவும், அதனை வெளியில் சொன்னால் தன்னை கொலை செய்து விடுவதாகவும் பி.ஆர்.பி., நிறுவனத்தினர் மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் , சகாயம் குழுவினர் விசாரிக்க துவங்கியுள்ளனர் . மதுரை மாவட்டம் சின்ன மலம் பட்டி அருகே மணிமுத்தாறு மயானத்தில் இரு உடல்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது .
பிணங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தில் நேற்று (செப்.,12) ஆய்வு செய்த சகாயம், தடயங்கள் இரவோடு இரவாக மறைக்கப்பட்டு விடக் கூடாது என்பதற்காக, இரவு முழுவதும் அங்கேயே தங்கி இருந்தார். இன்று (செப்.,13) காலை மருத்துவ குழுவினர், தடயவியல் நிபுணர்கள், போலீசார், அதிகாரிகள் முன்னிலையில் தோண்டும் பணி நடைபெற்றது. இதில் நன்பகல் 12.45 மணிக்கு ஒரு பெரிய ஆளின் எலும்புக்கூடும், மதியம் 2.45 மணிக்கு மற்றொரு நபரின் எலும்புக்கூடும், மாலை 3.20 மணியவளில் ஒரு எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது.
மாலை 4 மணியளவில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ஒரு பிரிவு மக்கள் மேலூர் தாசில்தாரை சந்தித்து, கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகள் தங்களது உறவினர்களுடையது எனவும், அந்த இடத்தை தங்கள் சமூகத்திற்கு மயானமாக பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் எனவும் மனு வழங்கினர்.
குறிப்பாக மன நலம் பாதிக்கப்பட்டவர்களை பிடித்து நர பலி கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
விசாரணை அதிகாரி சகாயம் தலைமையில் , முன்னாள் ஏ.டி.எஸ்.பி., வேலு, தனி உதவியாளர் ஆல்பர்ட், விசாரணைக்குழு அலுவலர் ராஜாராம், வருவாய்துறை அலுவலர் செந்தில்குமாரி, முது நிலை விஞ்ஞானி தேவசேனாதிபதி, ஏ.டி. எஸ்.பி . , மாரியப்பன் டி. எஸ். பி., மங்கலேஸ்வரன், வருவாய் துறை தாசில்தார் கிருஷ்ணன், கனிம வளத்துறை உதவி அலுவலர் ஆறுமுக நயினார், தடயவியல் நிபுணர்கள், மருத்துவ , வருவாய் குழுவினர் மயானத்தில் முகாமிட்டுள்ளனர் .