விசைப்படகுகளுக்கு பச்சை வண்ணம் கட்டாயம் : மீறினால் மானிய டீசல் நிறுத்தம்

ஜூன்.12, 2015:- 'விசைப்படகுகளுக்கு பச்சை வண்ண 'பெயின்ட்' கட்டாயம் பூச வேண்டும். இல்லாவிட்டால் மானிய டீசல் வழங்கப்பட மாட்டாது' என ராமேஸ்வரம் மீன்துறையினர் எச்சரித்து உள்ளனர்.
வங்க கடலில் மீன்பிடிக்கும் போது ரோந்து வரும் இந்திய- இலங்கை கடற்படையினர் அடையாளம் காண வசதியாக தமிழகத்தில் உள்ள 10 ஆயிரத்துக்கு அதிகமான விசைப்படகுகளுக்கு பச்சை, கருப்பு வண்ணங்களில் 'பெயின்ட்' பூச வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டு அந்தந்த பகுதி மீன்துறையினர் விசைப்படகின் மாதிரி படத்தை வெளியிட்டு இருந்தனர்.
இதன்படி 45 நாட்கள் அமலில் இருந்த மீன்பிடி தடை காலத்தில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் உள்ள 1200 விசைப்படகுகளின் மீனவர்கள் பெயின்ட் பூசாமல் மீன்பிடிக்க சென்றனர்.
இதனால் அவர்களுக்கு வழக்கமாக ஜூன் 12 க்குள் மானிய விலை டீசல் (ஒரு லிட்டர் ரூ.47.35) பெற்றுக்கொள்ள மீன்துறையினர் வழங்கும் புத்தகத்தை நேற்று வரை வழங்கவில்லை. மீனவர்கள் சந்தை விலையில் (ஒரு லிட்டர் ரூ.57.10) டீசல் வாங்குவதால் நஷ்டம் அடைகின்றனர்.
மேலும் ராமேஸ்வரம் மீன்துறையிடம் 200 க்கு அதிகமான படகுகளின் உரிமையாளர்கள் தங்களது பெயர் மாற்றம் செய்ய மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக மீனவர்கள் கூறினர்.
இதுகுறித்து ராமேஸ்வரம் மீன்துறை அதிகாரிஒருவர் கூறியதாவது:
விசைப்படகிற்கு பச்சை, கருப்பு வண்ண 'பெயின்ட்' பூச வேண்டும் என 3 மாதத்திற்கு முன்பே வலியுறுத்தியும் இதுவரை செய்யாமல் உள்ளனர். மாதிரி படத்தில் உள்ளபடி 'பெயின்ட்' பூசி, இன்சூரன்ஸ் தொகை செலுத்தினால் தான் மானிய டீசல் பெற புத்தகம் வழங்கப்படும் என்றார்.