தமிழக மீனவர்கள் தடுக்க சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படை கப்பல்கள் குவிப்பு

மே.31, 2015:- சர்வதேச கடல் எல்லையை கடந்து எங்களுடைய கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை சுடுவோம் என்று இலங்கை கடற்படை சில மாதங்களாகவே பகிரங்க மிரட்டல் விடுத்து வருகிறது. மேலும் தங்களுடைய பகுதிக்குள் தமிழக மீனவர்களை மீன்பிடிக்க அனுமதிக்கவே முடியாது என்றும் இலங்கை மறுத்து வருகிறது.
இந்த நிலையில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் மீனவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 45 நாள் மீன்பிடி தடை காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று 4 ஆயிரத்துக்கும் அதிகமான படகுகளில் தமிழக மீனவர்கள் வழக்கம்போல் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். இவர்கள் எந்த நேரத்திலும் சர்வதேச கடல் எல்லைப்பகுதியை கடந்து தங்களுடைய பகுதிக்குள் நுழையலாம் என்று இலங்கை கடற்படை கருதுகிறது.
இதனால், தங்கள் கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் புகுந்து மீன் பிடிப்பதை தடுக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை தீவிர நடவடிக்கைகளை எடுத்து உள்ளது.
குறிப்பாக, கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவதற்காக சில பெரிய ரோந்து கப்பல்களையும், 10 அதிநவீன விரைவு படகுகளையும் சர்வதேச எல்லைப்பகுதிக்கு கொண்டு வந்து இலங்கை கடற்படை நிறுத்தி உள்ளது.
சர்வதேச எல்லையைக் கடந்து தங்களின் எல்லைக்குள் மீன்பிடிக்க நுழையும் தமிழக மீனவர்களை முற்றிலுமாக தடுக்கும் நோக்குடன் இலங்கை கடற்படை இந்த நடவடிக்கையை எடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.