மீனவர் பிரச்னை : இலங்கை அமைச்சரின் கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் பதில்!

மே.27, 2015:- மீன்பிடி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆண்டின் 65 நாட்கள் இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற சமரச திட்டத்தை இலங்கையிடம் இந்திய அரசு தெரிவித்தது. இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
65 நாட்கள் அல்ல.. இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க 65 மணி நேரம்கூட அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கை மீன்வளத்துறை மந்திரி மஹிந்தா அமரவீரா கூறியுள்ளார்.
இது குறித்து பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்,
இரு நாடுகளின் மீனவர்கள் பிரச்சினையில் சுமூகமான முறையில் தீர்வுகாண்பதற்கு வசதியாக நாங்கள் அனுப்பிய பரிந்துரையை இலங்கை ஏற்காதது கவலை அளிக்கிறது. இதுபிரச்சினைக்கு தீர்வுகாண உதவாது. இந்திய கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் மீன்பிடிக்கிறார்கள். ஆனால் இந்திய மீனவர்கள் இலங்கை கடல்பகுதியில் மீன் பிடிக்கும்போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலை உள்ளது. இது மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையாகும். இதை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். எனவே இந்த பிரச்சினையில் இருநாடுகளும் இணைந்து இருதரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வை காண முன்வர வேண்டும்’ என கூறியுள்ளது.