மீனவர்கள் பிரச்னையில் உறுதியான நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

அக் 12,2015:- மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தூதரக அளவிலான உறுதியான நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம் என, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கை கைது செய்துள்ள 54 மீனவர்களையும் விடுவிக்கக் கோரி மோடிக்கு அவர் ஞாயிற்றுக்கிழமை எழுதியுள்ள கடித விவரம்:
கடந்த சில வாரங்களுக்குள் இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களைத் தொடர்ந்து 5-வது முறையாக கைது செய்த சம்பவம் குறித்து உங்களது கவனத்துக்கு கொண்டு வருவதற்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
நாகப்பட்டினத்திலிருந்து 2 படகுகளில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற 19 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, காங்கேசன்துறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து, இலங்கையின் வசம் உள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது. அதோடு, 34 படகுகளும் இலங்கையின் வசம் உள்ளன.
தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக இலங்கை அரசுடன் பேச்சு நடத்துமாறு தொடர்ந்து உங்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோதிலும், நடவடிக்கை எடுக்காததால் மீனவர்கள் தொடர்ந்து சிறைகளில் வாடுகின்றனர்.
அரசியல் சாசன சட்டத்துக்கு விரோதமான முறையில் 1974, 1976-ஆம் ஆண்டு ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு கச்சத்தீவை கொடுத்ததே இந்தப் பிரச்னைகளுக்கு அடிப்படை காரணம்.
தமிழக மீனவர்களுக்கு அவர்களின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதியான பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கும் உரிமை மறுக்கப்படுகிறது. பாரம்பரிய மீன்பிடி உரிமையை மறுப்பதும், இலங்கைக் கடற்படையினரால் சட்ட விரோதமாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் நீண்ட நாள்கள் அங்குள்ள சிறைகளில் வாடுவதும் தமிழக மீனவர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவை நீண்ட நாள்களாகப் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் சேதமடைவது குறித்தும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் ஏற்கெனவே உங்களது கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளேன்.
பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலும், தமிழக மீனவர்களின் மீன்பிடி உரிமையை உறுதிசெய்யும் வகையிலும் இந்தப் பிரச்னையைத் தீர்க்க, தூதரக அளவில் உறுதியான நடவடிக்கைகளுக்காக காத்திருக்கிறோம்.
மீனவர்களுக்கான ரூ.1,520 கோடியில் சிறப்புத் திட்டத்துக்கான நிதியை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேபோல், கடலை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக ஆண்டுக்கு ரூ.10 கோடியை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இலங்கை சிறைகளில் உள்ள 54 தமிழக மீனவர்கள் மற்றும் 34 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிப்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்னையை தூதரக அளவில் மட்டுமல்லாமல், அந்நாட்டின் தலைவர்களிடையே கொண்டு சென்று மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பிரச்னையில் உங்களது விரைவான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.