இந்தியா இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா?

இந்தியப்பெருங்கடல் சோகம் இனியாவது நிற்குமா?

பதிவர்: நிர்வாகி, வகை: இந்தியா  
படம்

மார்ச் 03,2014:- இந்திய - இலங்கை உறவில் முக்கியமான பிரச்சனையாகத் தொடர்வது மீனவர்களது துயரம். தரைவழி போல் கடல் எல்லைகளைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு செயல்பட முடியாது என்ற உண்மை உலகத்துக்கே தெரியும் என்ற போதிலும், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் எல்லை தாண்டிய தாகக் கூறி அவர்களை இலங்கைக் கடற் படையினர் கைது செய்வதும், சிறையில் அடைப்பதும் அடிக்கடி வருகிற செய்திகள்.

விடுதலையாகும்போது, மீனவர்கள் மட்டும் தான் திரும்பி வருவார்களேயன்றி அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகளும் வலைகளும் ஒப்படைக்கப்படுவதில்லை. சில நேரங் களில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட அராஜகங்களும் நடந்திருக்கின்றன. உலகம் முழுவதுமே கடலோர எல்லைகளைக் கொண்ட நாடுகளுக்கிடையே மீனவர்கள் எல்லை தாண்டுவது அடிக்கடி நிகழ்வதுதான்.

முறைப்படி கைது செய்வது, வழக்குத் தொடர்வது அல்லது எச்சரித்துத் திருப்பி அனுப்புவது என்ற நடைமுறைகள்தான் மற்ற நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகின்றன. சுட்டுக்கொல்வது, விலையுயர்ந்த வலைகளை அறுப்பது, படகுகளைக் கைப்பற்றுவது, சேதப்படுத்துவது என்பதெல்லாம் இலங்கை கடற்படையினரால் மட்டுமே செய்யப்பட்டன.

விடுதலைக்குப் பிறகும் வாழ்வாதாரங்களுக்காக போராட வேண்டிய அவலம் மீனவர்கள் மீது திணிக்கப்பட்டு வந்தது.அதே வேளையில், தமிழக மீனவர்கள் வேறு வழியில்லாத சூழல்களில் எல்லை தாண்டினா லும் கூட, அதனால் பாதிக்கப்படுகிறவர்கள் இலங்கையின் தமிழ் மீனவர்கள்தான் என்ற பிரச்சனையும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால் அதற்காக இலங்கை அரசு தனது கடற்படையினரின் மூலமாகத் தமிழக மீனவர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கில்லை.

இப்படிப்பட்ட சிக்கலான சூழலில், இந்திய அரசு உரிய அக்கறையோடும் பொறுப்போடும் இதில் தலையிடவில்லை என்ற குற்றச்சாட்டு வலு வாக முன்வைக்கப்பட்டு வந்தது. அரசுறவு மட்டத்திலான வழிமுறைகளை வலுவான முறையில் பயன்படுத்தித் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசும் அரசியல் இயக்கங்களும் மீனவர் அமைப்புகளும் முன்வைத்த கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகவே தெரியவில்லை.

இந்தப் பின்னணியில் வரும் 20ம் திகதியன்று இருதரப்பு மீனவர் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற இருக் கிறது என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதையொட்டி தற்போது இலங்கைச் சிறைகளில் இருக்கும் 275 தமிழக மீனவர்களும், தமிழகச் சிறைகளில் இருக்கும் 179 இலங்கை மீனவர்களும் திங்கட்கிழமை முதல் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். இந்த முக்கியமான வளர்ச்சிப் போக்கு உருவாகக் காரணமானவர்கள் அனைவரும் பாராட்டுக்குரிய வர்கள்.

இரு தரப்பினரும் ஏற்கத்தக்க வகையில் மீன் பிடிப்பு உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும், வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் படகுகளையும் வலைகளையும் ஒப்படைக்க வழிசெய்வதாகவும் அந்தப் பேச்சு வார்த்தை முடிவுகள் அமைய வேண்டும்.

உங்களது கருத்துக்கள் உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன!
தமிழ் / ஆங்கிலத்தில் எழுத இங்கே சொடுக்கவும் [CTRL+G]யை சொடுக்கியும் மாற்றி கொள்ளலாம்
CAPTCHA code
இந்த படத்தில் உள்ள எழுத்துக்களை உள்ளீடவும்