தாது மணல் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது : உயர்நீதிமன்றம் அதிரடி

ஆக.11, 2015:- கனிம மணல் வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தாது மணல் அள்ளுவதற்கு வி.வி.மினரல் உள்ளிட்ட 32 நிறுவனங்களுக்கு தனி நீதிபதி வழங்கிய அனுமதியை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வி.வி.மினரல் உள்ளிட்ட 32 நிறுவனங்கள் தாது மணல் அள்ளுவதற்கு மத்திய அரசின் கனிம வளத்துறை 20 ஆண்டுகளுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் விதிகளை பின்பற்றாதது உள்ளிட்ட காரணங்களால் 32 நிறுவனங்களுக்கு வழங்கிய உரிமைத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்ததை எதிர்த்து, அந்நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
இதனை விசாரித்த நீதிபதி பி.எஸ்.கர்ணன் மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மனு மீது தலைமை நீதிபதி கவுல் மற்றும் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரணை நடத்தியது. விசாரணைக்கு பின் வழங்கிய தீர்ப்பில் 32 நிறுவனங்களுக்கு தனி நீதிபதி வழங்கிய அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டது.
நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதற்கு முன்பு மத்திய அரசின் விளக்கத்தை தனி நீதிபதி கேட்கவில்லை என்றும், அனுமதி வழங்குவதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 32 நிறுவனங்களும் தாது மணல் அள்ள மத்திய அரசிடம் மீண்டும் புதிதாக அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது