பலவந்தமாக பெண்ணை முத்தமிட முயற்சி ; வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுப்பு

ஆக.11, 2015:- டெல்லியில் பட்டப்பகலில் பலவந்தமாக பெண்ணை முத்தமிட முயற்சித்த நபர் மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி போலீசார் மறுத்துள்ளனர். நிகில் என்ற நபர் டெல்லியின் பிரபல பகுதியில் ஒரு பெண்ணை முத்தமிட முயன்றபோது, அக்கம்பக்கத்தில் சென்றவர்களின் உதவியுடன், அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு போலீசாருக்கு அந்தப் பெண் தகவல் கொடுத்தார். தகவல் கொடுத்த 40 நிமிடம் கழித்து அங்கே வந்த போலீசார் அந்த நபரை கைது செய்யாமல் அவரிடம் தனியாக பேசியுள்ளனர்.
அதன் பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் புகார் கடிதம் எழுதித் தரும்படி அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் குமார் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண் எழுதிக் கொடுத்த புகார் கடிதம் தெளிவாக இல்லை எனக் கூறி இரு முறை நிராகரித்துள்ளார். அது மட்டுமல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்ணின் தொலைபேசி எண்ணை, நிகிலின் பெற்றோரிடம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தோழி, ராதிகா பி சிங் என்ற பெண் முகநூலில் நிகிலின் புகைப்படத்துடன் இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.