என் கணவருக்கு அழகான பெண்களைப் பற்றித்தான் கவலை; சோம்நாத் பாரதியின் மனைவி

ஆக.04, 2015:- ‘என் கணவருக்கு அழகான பெண்களின் பாதுகாப்பு பற்றி மட்டும் தான் கவலை இருக்கிறது. என் பாதுகாப்பு குறித்து எந்த கவலையும் இல்லை’ என்று தனது கணவரும் முன்னாள் மாநில சட்டமந்திரியுமான சோம்நாத் பாரதியை, லிபிகா மித்ரா கடுமையாக சாடியுள்ளார்.
முன்னாள், சர்ச்சை நாயகனான சோம்நாத், தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். டெல்லி சட்டசபையில் விசாரணைக் கமிஷன் ஒன்றை அமைப்பது தொடர்பான ஆலோசனையின் போது கருத்து தெரிவித்த சோம்நாத் பாரதி, டெல்லி அரசுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, காவல் துறை எங்கள் கட்டுப்பாட்டில் இயங்கினால், அழகான பெண்கள் நள்ளிரவிலும் கூட பயமில்லாமல் வெளியில் செல்லும் வகையில் முழு பாதுகாப்பை வழங்குவோம் என்று தெரிவித்தார். பெண்கள் குறித்த அவரது இந்த கருத்துக்கு காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சியினர், கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சோம்நாத் “அழகான பெண்கள்” என குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, அவரின் மனைவி லிபிகா கடுமையாக சாடியுள்ளார். லிபிகா கூறுகையில், “நான் சற்று சுமாரான, அழகு குறைந்த பெண் என்பதால்தான் என் கணவர் என்னை மனதளவில் காயப்படுத்தியுள்ளார். அவருக்கு அழகிய பெண்களின் பாதுகாப்பு பற்றி மட்டும்தான் கவலை. என்னைப் பற்றியெல்லாம் கவலை கிடையாது", என தெரிவித்துள்ளார்.
சோம்நாத்தின் சர்ச்சைக்குரிய கருத்தை, அவரது மனைவி மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.