மது என்ன உணவுப் பொருளா? தடை விதியுங்கள் - மும்பை உயர்நீதிமன்றம்

ஜூலை.23, 2015:- மது என்ன உணவுப் பொருளா? முதலில் மதுவிற்கு தடை விதியுங்கள்; அது உடல்நலத்திற்கு மிகவும் தீமை விளைவிக்கக் கூடியது என்று மும்பை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நெஸ்லே இந்தியா நிறுவனம் மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு மும்பை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது, மேகி நூடுல்சிற்கு விதிக்கப்பட்ட தடை சரியானது தான் என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய கழகம் வாதிட்டது. மேலும், மேகி நூடுல்ஸ் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியது எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தது.
பின்னர், இது தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள் வி.எம்.கனாடே மற்றும் பி.பி.கோலாபவல்லா ஆகியோர், "முதலில் மதுவிற்கு தடை விதியுங்கள். தற்போது பள்ளி குழந்தைகள் கூட மது அருந்துகிறார்கள். அது தான் உடல் நலத்திற்கு மிகவும் கேடானது. மது என்ன உணவு பொருளா? இதே போல் சிகரெட்டும் உணவு பொருட்கள் பட்டியலில் சேராதது. அதுவும் உடல்நலத்திற்கு கேடானது தான்" என தெரிவித்துள்ளனர்.
அதே சமயம், நெஸ்லே இந்தியா நிறுவன வழக்கறிஞர், ’நாட்டில் எந்த மதுபான வகையும் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறை கழகத்தின் உற்பத்திக்கான அனுமதியை பெறவில்லை என வாதிட்டார். தங்களின் தயாரிப்பு லேபிள்களில் எம்.எஸ்.ஜி. இல்லை எனவும் தெரிவித்தார்.