புகைப்பிடிப்பவர்களுக்கு ரூ.76000 கோடி நஷ்டஈடு!

ஜூன்.04, 2015:-கனடாவில் உள்ள மூன்று முன்னணி சிகரெட் நிறுவனங்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு 76536 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இம்பீரியல் டொபாக்கோ ரோத்மன்ஸ் பென்சன் அண்டு ஹெட்ஜஸ் மற்றும் ஜே.டி.ஐ. மெக்டொனால்ட் ஆகிய மூன்று சிகரெட் நிறுவனங்களுக்கு எதிராக புகைபிடிப்பவர்கள் சார்பில் இரண்டு புகைப்பிடிப்போர் குழுக்கள் தொடுத்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரைய்ன் ரியோர்டன் இவ்வளவு பெரிய தொகையை நஷ்டஈடாக வழங்க வேண்டுமென தீர்ப்பளித்துள்ளார்.
2012 மார்ச்சில் 10 லட்சம் மக்களின் உரிமைக்காக இந்த வழக்கு போடப்பட்டது. இந்த நிறுவனங்களின் சிகரெட்டுகளைப் பிடித்தவர்கள் கடுமையான நோய்க்கு ஆளானார்கள் என்றும் புகையிலைப் பிடிப்பதை நிறுத்த முடியாமல் தொடர்ந்து புகைப்பிடித்ததால் பாதிக்கப்பட்டார்கள் என்றும் வழக்கில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி 76536 கோடி ரூபாயை நஷ்டஈடாக அறிவித்தார். அதில் 67 சதவீதத்தை இம்பீரியல் டொபாக்கோ நிறுவனமும் 20 சதவீதத்தை ரோத்மன்ஸ் பென்சன் அண்டு ஹெட்ஜசும் 13 சதவீதத்தை ஜே.டி.ஐ. -மெக்டொனால்டும் பொறுப்பேற்க வேண்டுமென தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நஷ்டஈட்டில் முதல் பகுதியை அடுத்த 60 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. அந்த தொகையைப் பிரித்தளிக்கும் பொறுப்பை நீதிபதியே பின்னர் முடிவு செய்வார் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளன.