இந்தியா என்பதை "பாரத்" என்று மாற்ற கோரிக்கை : பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

ஏப்.24, 2015:- இந்தியாவை, 'பாரத்' என, அறிவிக்கும்படி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், மத்திய, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான நிரஞ்ஜன் பட்வால் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனு: கடந்த, 1949ல், அரசியல் நிர்ணய சபையில், நம் நாட்டிற்கு என்ன பெயர் வைக்கலாம் என்பது தொடர்பாக, ஒரு விவாதம் நடைபெற்றது.
அதில், பல யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அதில், பிரதானமான ஒரு யோசனை, இந்தியாவை, 'பாரத்' என, அறிவிக்க வேண்டும் என்பது. எனவே, 'இந்தியாவை, பாரத் என, அறிவிக்க வேண்டும்' எனக்கோரி, கடந்த ஆண்டில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தேன். மனுவை தள்ளுபடி செய்த கோர்ட், இதுதொடர்பாக மத்திய அரசிடம் முறையிடும்படி தெரிவித்தது.
அதனடிப்படையில், மத்திய அரசிடம் மனு ஒன்றை அளித்தேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. எனவே, இந்த மனுவை தாக்கல் செய்துள்ளேன். பாரத் என்பதற்கு உண்மையான அர்த்தம், 'பாரதவர்சா' என, மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. வர்சா என்றால், பூமியின் ஒரு பகுதி அல்லது கண்டமாகும்.
எனவே, இந்தியாவை, பாரத் என, அறிவிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவித்திருந்தார். மனுவை பரிசீலித்த தலைமை நீதிபதி தத்து தலைமையிலான, சுப்ரீம் கோர்ட் அமர்வு, மத்திய, மாநில அரசுகளுக்கும், அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.