தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக வந்த சீன மாணவியான நிலானி

தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க.
“நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கு” என்று புன்னகைக்கிறார் நிலானி.
சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத் தமிழ் டிப்ளமோ படிப்பு படித்துவருகிறார். நிலானியில் பேச்சில் தமிழ் மொழி மீது அவருக்கு இருக்கும் தீராத காதல் வெளிப்படுகிறது.
“தமிழ் மொழி அருமையானது. அதன் உச்சரிப்பில் உள்ள இன்பம் உலகில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் மொழிக்கு எந்நாளும் ஆங்கிலம் மாற்றாகாது. ஆங்கிலத்தை முன்வைத்துத் தமிழை அலட்சியப்படுத்துவதால் ஒரு இனம் அழிவதோடு, உன்னதமான பண்பாடும் கலாச்சாரமும் அழிந்துவிடும்” - தமிழை நாம் போற்றி வளர்க்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார் நிலானி. ( தமிழ் மீது ஆர்வம் )
நிலானிக்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயர் ஹூ லீ யுவான். சீனா தகவல் தொடர்பாளர் பல்கலைக் கழகத்தில் (Communication University of China) தமிழ் இனத் தொடர்பியல் பட்டம் படிப்புக்கு சேரும்வரை அவருக்குத் தமிழ் தெரியாது. அங்கு சுந்தரம் என்ற பேராசிரியர்தான் தமிழ் கற்க சீனர்களுக்கு காலங்காலமாக வழிகாட்டியாக இருந்துவருகிறார். அவரிடம்தான் நிலானியும் தமிழ் பயின்றார்.
.
சீனாவில் பலர் தமிழைப் படிப்பதைப் பெருமையாக நினைக்கிறார்கள் என்று குறிப்பிடும் நிலானி, பெய்ஜிங், ஹாங்காங் ஆகிய இடங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருப்பதையும் நினைவுகூர்கிறார்.
“அந்த அளவு சீனாவில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு நாங்கள் போவோம். அந்த நிகழ்ச்சிகளை சீன வானொலியில் ஒலிபரப்பும் செய்வோம்” என்கிறார் நிலானி.
தமிழில் ர, ற ஆகிய இரண்டு எழுத்துக்களையும் உச்சரிக்க நிறையவே தடுமாறியிருக்கிறார். அவற்றைப் படிக்க மட்டும் நிலானிக்கு ஒரு மாதமானதாம்.
“இப்படியொரு உச்சரிப்பு சீன மொழியில் இல்லை. அதேபோல தமிழ் எழுத்துக்கள் சித்திரம் போல் இருக்கின்றன. அவற்றை எழுதவும் எங்களுக்கு நிறைய பயிற்சி தேவைப்பட்டது” என்று நிலானி சொன்னாலும் அவரது தமிழ் உச்சரிப்பில் பிழையேதும் இல்லை.